Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

- கவிஞர் வைரமுத்து

பித்தன்


‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.

நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.

ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.

அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.

திரைகள் விலகின.

எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.

முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.

காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.

உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.

அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.

அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.

நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.

அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.

ஏன்?என்றேன்.

அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.

அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.

அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.

நான் அவர்களுடைய
அம்பலம்.

கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.

அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.

நான் உடைந்தேன்.

காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.

(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)
நன்றி: http://kavikko.wordpress.com/2010/02/18/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

காதலித்துப்பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்


காதலித்துப் பார்
------------------------------

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்


காதலித்துப்பார்
--------------------------------

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்
-----------------------------------

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்
---------------------------------------

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்
------------------------------------

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்!

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
நூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

கனம்


இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது.

அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்.

இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு நிமிர்ந்து நிற்கும்போதுள்ள
இந்தக் கூனல்.

அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப்படும்
கதிர் குலைகள் போன்றது
இல்லாத காதலின் கனம்.

இல்லாத சுதந்தரத்தின் கனமே
இந்த அலைச்சல்.

இப்போது அருகிலெங்கும் இல்லாத
மரணத்தின் கனம்தான்.

மச்சின் உத்தரத்தில் உள்ள
கொக்கி நோக்கி நகரும்
என் சபலப் பார்வை.

இல்லாத தூக்கத்தின் கனம்
இந்தக் கொடுங்கனவு.

அதற்குள்
சொற்களின் கனத்தால்
உதடுகள் தளர்ந்து விட்டிருந்தன.

கனம் மட்டுமே இருந்தது.

இல்லாதவற்றின் கனமெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது.

உடைந்து விழுந்த சுமைதாங்கி
அதைக்கேட்டு
இல்லாத கவனத்தின் கனத்தை
காற்றின் மீது ஏற்றி வைத்தது.

-பி.ராமன் கவிதை
நன்றி: http://www.jeyamohan.in/?p=365